மதுரை, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்கள்.. இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வருகிற 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மாவட்டத்தை ஒட்டிய மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. வட தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை பகலில் கடுமையான வெப்பமும் இரவில் திடீரென மழையும் பெய்து வருகிறது.

சென்னையில் இன்று அதிகாலை சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் அதிகாலையில் சில இடங்களில் பெய்த லேசான மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனிடையே, தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 40 கிலோ மீட்டர் வரையிலான பலத்த காற்றுடன் மிதமான மழையும், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதற்கான மஞ்சள் 'அலெர்ட்' விடுக்கப் பட்டுள்ளது.
நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுதினம், அதவாது வரும் புதன்கிழமை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
15-ம் தேதி, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications