அடுத்த 3 மணி நேரத்திற்கு சம்பவம் இருக்கு! சென்னை உட்பட 27 மாவட்டங்களுக்கு.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமாகவும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்கள் போதுமான அளவு மழையை பெற்றிருக்கின்றன. இதனால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணை மற்றும் ஏரியிலிருந்து நீர் திறக்கப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தற்போது சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் நீர் தேங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன. ஆவடி பேருந்து நிலையத்தில் குளம் போல மழை நீர் தேங்கியிருக்கிறது. கடந்த 4 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 6.7 செ.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 12.6 செ.மீ, திருவிக நகரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications