சென்னையில் இன்று கிளைமேட் எப்படி இருக்கும்? குடை தேவைப்படுமா.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: நேற்று நெல்லை, தென்காசி, குமரி, கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அப்படியே குறைந்துவிட்டது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் விட்டு விட்டு தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

குமரியில் கனமழை: குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தென்காசி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் குமரியில் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்துள்ளது. மேலும் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளனர்.
நேற்றும் குமரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லை மற்றும் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்றும் நாளையும் எப்படி?: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8, 9, 10 ஆம் தேதி: குறிப்பாக 8 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10 ஆம் தேதி தமிழகத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சூறாவளிக்காற்று: மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications