அடுத்த 2 மணி நேரம்.. தஞ்சை, திருச்சி, நெல்லை என.. 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தஞ்சை, தேனி, திருச்சி என 11 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று, அரசியலூர், பெரம்பலூர் உள்பட 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் மழை பெய்தது. சென்னை, நெல்லை, குமரி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்சு நிற எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மற்றும் காரைகால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது.
இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு வார அப்டேட்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான் மழை அப்டேட்டில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை புதன்கிழமை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?
வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று பொங்கல் தினம் அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை மாட்டுப்பொங்கல் அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications