விருதுநகர், குமரி, நெல்லை.. அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 56 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் சென்னை போன்ற தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்ப அலை வீசுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கோடை மழை எப்போது பெய்யும் என்று ஏக்கத்தோடு உள்ளனர்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் இதே நிலைமை தான். வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தென் மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் கொளுத்தி எடுத்த வெயிலுக்கு பிரேக் கொடுத்த மாதிரி கடந்த ஒரு வாரம் குளிர்ச்சியாக இருந்தது. கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களிலும் வெயில் மீண்டும் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.
இதனால் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்குமோ என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது:- அடுத்த 3 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் , கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தென் மாவட்டங்களில் கொளுத்தி எடுத்த வெயிலால் நீர் நிலைகளில் நீர்மட்டம் கடகடவென குறைந்தது. அணைகளில் நீர் மட்டம் குறைந்ததால் ஒருசில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலைமையும் உண்டானது. அதனை தொடந்து 4 நாட்கள் பெய்த மழையால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதே போல் ஏப்.24 மற்றும் ஏப்.25ம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 23ம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications