100 டிகிரி வெயிலுக்கு நடுவில்.. இடி, மின்னலுடன் மழை! 6 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்னும் 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

நேற்று மட்டும் சுமார் 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. அதாவது, ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 105, சேலம், வேலூர், தருமபுரியில் 104, திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 -106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரளவு லேசான மழையும் பெய்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications