அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுக்க போகுதாம்.. சென்னை வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தேனி மற்றும் நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிவிட்டது. கடந்த மாத துவக்கத்தில் சென்னையில் பேய் மழை கொட்டியது. பிறகு 16, 17 ஆகிய தேதிகளில் நெல்லை , தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்த மழையால் மாநகரமே வெள்ளத்தில் சில நாட்களுக்கு மிதந்தது.

இந்த பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் தென் மாவட்டத்தில் பெய்த மழை நெல்லை, தூத்துக்குடியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்தது. தற்போதுதான் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டும் வரத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தில் உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை, செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications