அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை, திருவள்ளூர் உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உக்கிரமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தலைநகர் சென்னையை பற்றி தனியாக சொல்ல வேண்டியது இல்லை. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயில்.. இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம்.. என மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னையில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது. சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் தகித்த வெப்பத்தால் மழை எப்போது வரும் என மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாதம் இறுதி முதல் தமிழகம் முழுவதும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நல்ல மழை பெய்தது.
தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications