தென் மாவட்ட மக்களுக்கு குஷி.. அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்ட போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதனால், மக்கள் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பி நிம்மதி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவிலேயே உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், வட தமிழக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தனது வழக்கமான வானிலை முன்னறிவிப்பில் கூறியிருந்ததாவது: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37°- 40 செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36 செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19'-20° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் சேலத்தில் 39.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 363 செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. "தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications