ஜில் ஜில் அறிவிப்பு.. தென்தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாளை தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் போல வெப்பம் தகித்து வந்த சூழலில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் திருக்குவளையில் 5 செ.மீ அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால், இந்த முறை கோடைக்காலத்தில் வெப்பநிலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் கோடைக்காலத்திற்கு முன்பாகவே அனேக இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவானது. இதனால் வெயிலை சற்று தணிக்கும் வகையில், கோடை மழை பெய்யாதா? என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதன்படியே தற்போது தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
நாகையில் 5 செ.மீ மழை: சென்னை வானிலை மையமும் 20 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. அதன்படியே, தென்காசி மாவட்டம், நாகை மாவட்டங்களில் வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
குறிப்பாக நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 செ.மீ அளவு மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று, நாளையும் மழை பெய்ய வாய்ப்பு:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22.03.2024: தென்தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23.03.2024 முதல் 27.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22.03.2024: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் எப்படி?:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
21.03.2024 மற்றும் 22.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
கடந்த 24 மணி நேரத்திற்கான மழை அளவு:
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
திருக்குவளை (நாகப்பட்டினம்) 5 செ.மீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) - 4 செ.மீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) - 2 செ.மீ
கோடியக்கரை (மயிலாடுதுறை) - 1 செ.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) - 1 செ.மீ
மிமிசல் (புதுக்கோட்டை)- 1 செ.மீ
வெப்பநிலை பற்றிய குறிப்பு :
ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோடை வெயில் போல் தமிழகத்தில் வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில் அங்கங்கு பெய்த மழையினால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications