வெள்ள பாதிப்பு.. அனைத்து உதவிகளும் செய்வோம்.. முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி
சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்த சேதத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்கள் மீள்வதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை புயல், மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், புயல் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய அரசின் பல்துறை குழுவை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இதனிடையே மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சந்தித்தார். அப்போது இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்ததை டி.ஆர்.பாலு வழங்கினார்.
அந்த சந்திப்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. பிரதமர் மோடியை சந்தித்த டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியிடம் வெள்ள சேதம் குறித்து எடுத்து கூறியதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வெள்ள சேதங்களை கேட்டறிந்த பிரதமர் மோடி அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்துள்ளதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications