மழை வெள்ளத்தில் தொலைந்து போன ரேசன் கார்டுகள்.. ரூ.6000 நிவாரணம் பெறுவது எப்படி
சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரேசன் கடைகள் மூலம் இந்த பணம் ரொக்கமாக வழங்கப்பட உள்ள நிலையில் ரேசன் கார்டு இல்லாதவர்கள் நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் பெருமழை பெய்தது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை நின்று 6 நாட்கள் ஆன பின்னரும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்த போது வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மண்டலம், பகுதி மற்றும் தெரு பெயர், குடும்ப தலைவரின் பெயர், கைபேசி எண், முகவரி, குடும்ப அட்டை உள்ளதா?, இருக்கிறது எனில் அட்டை எண். இல்லை எனில் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடையின் பெயர், வங்கி கணக்கு உள்ளதா, ஆம் எனில் வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், குடியிருப்பது குடிசை வீடா, நிரந்தர வீடா?, குடியிருக்கும் குடிசை அல்லது நிரந்தர வீடு முழுமையாக பாதிக்கப்பட்டதா, பகுதியளவு பாதிக்கப்பட்டதா? குடியிருக்கும் வீடு வெள்ள நீரால் சூழப்பட்டிருந்ததா?
ரேஷன் கார்டு இல்லை எனில் இதர ஆவணங்கள் என்ன? என்ற விவரங்களை கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டும். ரேஷன் கார்டு இல்லை எனில், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை அளிக்கலாம். முகவரி மாறி தற்போது அந்த பகுதிக்கு வந்தவர்கள் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தற்போது வசிக்கும் முகவரி, அடையாள அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை அளிக்கலாம். கணக்கெடுப்பாளர் அருகில் இருப்பவர்களிடம் விசாரித்து உறுதி செய்து கொள்வார். இதனையடுத்து வங்கிக்கணக்கில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள ரேசன் கடைகள் மூலம் ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பல பகுதிகளில் வெள்ளத்தில் ரேசன் கார்டு, ஆவணங்கள், பத்திரங்கள் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. ரேசன் கார்டுகள் இல்லாமல் வெள்ள நிவாரணம் எப்படி பெறுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. ரேசன் கார்டு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்கள் https://tnpds.gov.in/ என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று தங்களுடைய முகவரி உள்ள ரேசன் கார்டு விபரத்தை பிரிண்ட் அவுட் எடுத்து நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
வெளியூர்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியேறியவர்கள் பலர் சொந்த ஊர்களில் ரேசன்கார்டுகளை வைத்திருப்பார்கள். அப்படி ரேசன்கார்டுகள் இல்லாதவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நிவாரணம் எப்படி வழங்குவது என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications