சென்னை வெள்ளம்.. எங்கு பார்த்தாலும் மக்களின் அபயக்குரல் தான் கேட்கிறது.. ஓ பன்னீர் செல்வம்
சென்னை: எங்கு பார்த்தாலும் மக்களின் அபயக்குரல் தான் கேட்கிறது என்றும், அரசு சார்பில் எங்கும் நலத்திட்ட உதவிகள் செய்தது போல் எனக்கு தெரியவில்லை என்றும் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் கடந்த 26 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை விட்டு 3 நாட்கள் ஆகியும் இன்னும் ஒருசில இடங்களில் மழை வெள்ளம் வடியவில்லை. வெள்ள நீரை வடிய வைக்க அரசு பல்வேறு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதேபோல் நிவாரண பணிகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் மக்களுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில் எங்கு பார்த்தாலும் மக்களின் அபயக்குரல் தான் கேட்கிறது என்றும், அரசு சார்பில் எங்கும் நலத்திட்ட உதவிகள் செய்தது போல் எனக்கு தெரியவில்லை என்றும் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது:-
அவல நிலை தான் உள்ளது: சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறோம். அரசு சார்பில் எங்கும் நலத்திட்ட உதவிகள் செய்தது போல எங்கள் கண்களுக்கு தென்படவில்லை. எங்கு பார்த்தாலும் மக்களுடைய அபய குரல் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் இருக்கிறதே தவிர மக்களிடம் இருந்து திருப்தியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. 10 நாட்களுக்கு முன்பே இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்றும், சென்னை மாநகரத்தை புயல் தாக்கும் என்றும் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்திருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் இத்தகைய பாதிப்பு இருக்காது. நிவாரண பொருட்கள் எங்கும் சரியாக, முறையாக சென்று சேரவில்லை. ஆவின் பால் லிட்டருக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்க கூடிய அவல நிலை தான் உள்ளது. ஜெயலலிதாவை விமர்சிக்க யாருக்கும் தெம்பு இல்லை, திரானி இல்லை, லாயக்கு இல்லை. திருவத்தூரில் மழை நீரோடு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
வருகின்ற தேர்தலில்: ரசாயன கழிவுகளினால் ஏற்படும் பாதிப்பு அங்கு மக்களுக்கு அதிகமாக இருக்கிறது. தோல் வியாதிகள், கண்கள் சம்பந்தமான நோய்கள் அதிகம் பாதிக்கிற நிலைமை இருக்கிறது. இதனை அரசு உடனடியாக ஆய்வு செய்து, கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன். வருகின்ற தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தக்க பதிலடியை கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications