அம்மா நீங்க அங்கயே இருங்க.. களத்தில் அண்ணாமலை! வீடு வீடாக போய் நிவாரண பொருட்களை வழங்கிய பாஜகவினர்!
சென்னை: சென்னையில் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி, நிவாரண உதவி வழங்கி வருகிறார்.
மிக்ஜாம் புயலின் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. சென்னையில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் பொத்துக்கொண்டு ஊற்றிய வரலாறு காணாத கனமழை காரணமாக, சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது. கனமழையால் நீர் நிலைகள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் மக்கள் அனைவரும் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு தொடர்ந்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சி சார்பிலும் தன்னார்வலர்கள் சார்பிலும் படுக்க பாய் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்படும் பொருட்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் மழைநீர் சற்றும் வடியாமல் தேங்கி நிற்பதால், அங்கிருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர். இதனால், அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு அத்தியவாசியப் பொருள்கள் கூட கிடைக்காத சூழல் நிலவி வருவதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில், முழங்கால் அளவு வெள்ள நீரில் நடந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பால் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், பிரெட் போன்றவை வழங்கப்பட்டன.
மேலும், அப்பகுதியில் வெள்ள நீருக்கு மத்தியில் வசித்து வரும் பொதுமக்களிடம் அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்த அண்ணாமலை, ஒவ்வொரு மழை காலமும் இப்படித்தான் மழை தண்ணீர் தேங்குகிறதா? இதற்கான காரணம் என்ன? அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கிறதா, உங்கள் பகுதி கவுன்சிலர் உங்களை மீட்க வந்தாரா என்றெல்லாம் கேட்டு விசாரித்துள்ளார்.
தொடர்ந்து மேற்கு சைதாப்பேட்டை, விநாயகபுரம், ஆயிரம் விளக்கு, ராயபுரம், சின்னமாத்தூர் ஆகிய பகுதிகளையும் இன்று மாலை வரை நேரில் பார்வையிட உள்ளார் அண்ணாமலை. அதன் பிறகு இந்த நேரடி ஆய்வின்போது தன்னிடம் பொதுமக்கள் கூறிய கருத்துக்கள், தண்ணீர் தேங்குவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிக்கை வாயிலாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications