சென்னைக்கு மேல் அப்படியே நகராமல் நின்ற கரு மேகங்கள்! மழை தொடரும் என அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுப்பெற்றிருக்கிறது. இது தமிழகம் வழியாக அரபிக்கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை மேலும் தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழை தமிழகத்தை அதிகம் சோதிக்கிறது. இந்த முறையும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கிய பருவமழை, தற்போது வரை 449.2 மி.மீ அளவுக்கு மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. இந்த காலத்தில் இயல்பான மழை அளவு 398.3 மி.மீதான். வழக்கத்தைவிட 13% கூடுதலாக பருவமழை பெய்திருக்கிறது. இதனால் சென்னை தொடங்கி தஞ்சை, புதுக்கோட்டை வரை வட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பதிலேயே அதிக மழை பெற்ற மாவட்டம் நாகைதான். இங்கு இயல்பான மழை அளவு 767 மி.மீ. ஆனால் தற்போது வரை 943.4 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. மழை காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சென்னையை பொறுத்தவரை 731.9 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 845.8 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இது இயல்பை விட 16% அதிகமாகும். எனவே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் முதன்மையானது செம்பரம்பாக்கம் ஏரி. இது தற்போது 80% வரை நிரம்பியிருக்கிறது.
நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னையில் கனமழை பெய்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக ரெட்ஹில்ஸ் பகுதியில் சுமார் 6 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வடதமிழகத்தை ஒட்டிய கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையின் மேகங்கள் வலுவாக திரண்டிருப்பதால், அடுத்த சில மணி நேரத்திற்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக நேற்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications