சென்னைக்கு இன்னிக்கு மழை ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சி.. இலங்கையிலிருந்து லைட்டா மேல ஏறிடுச்சின்னா போதும்!
சென்னை: சென்னையில் இன்று காலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழையால் இதுவரை வங்கக் கடலில் புயலோ காற்றழுத்தமோ இதுவரை உருவாகவில்லை. அப்படி உருவானால் மட்டும் தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீபாவளிக்கு ரெஸ்ட் எடுத்தது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
இது மட்டுமல்லாமல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட அநேக இடங்களிலும் தமிழகத்தின் மாவட்டங்கள் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காலை முதல் சென்னை சாரல் மழையே பெய்து வந்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்த போது அய்யோ நாம் அந்த மாவட்ட பள்ளியில் படித்திருக்கலாமே என நினைத்து விட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு தயாராகி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் சென்னை ரெயின்ஸ் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோரத்தில் உள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி லேசாக வடக்கு நோக்கி நகர்ந்தால் கனமழைக்கான மேகக் கூட்டங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கனமழை பெய்யும். சென்னை- கடலூர் இடையே மழையானது விட்டு விட்டு பெய்யும். அது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு மகாபலிபுரம்- வேதாரண்யம் இடையே கனமழை பெய்தது. தற்போதும் பாண்டிச்சேரி- நாகப்பட்டினம் கடற்கரை அருகே நல்ல மழை பெய்யும். இவ்வாறு சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications