chennai rains: சில்லுனு மாறிய சென்னை.. அதிகாலையிலேயே வெளுத்தெடுத்த கனமழை! இன்னும் ஒரு வாரத்துக்கு சம்பவம்!
சென்னை: சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்றும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், அதிகாலையில் வேலைக்குச் செல்லும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை வலு இழந்திருக்கும் நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகின்ற 23ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

வானிலை
குறிப்பாக சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்றும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல இடங்களில் கன மழை பெய்தது. அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னை மழை
குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, காமராஜர் சாலை, மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆவடி போன்ற இடங்களிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னை வானிலை
மழையால் தாழ்வான சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிகாலை வேலைக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள், வாகனங்களில் சென்றவர்கள், நடந்து செல்ல வேண்டியவர்கள் என அனைவரும் சிரமத்திற்குள்ளாகினர். மழை காரணமாக சிரமம் ஏற்பட்டாலும், மழை காரணமாக சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பத்தால் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதி அளித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இதனிடையே தென்மேற்கு பருவமழை சற்றே வலு இழந்த நிலையில், வளிமண்டலத்தில் காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல் நேரங்களில் வெப்பம் கடுமையாக இருந்தாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும். இதேபோல், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த வானிலை மாற்றம் தென்பட்டுக்கொண்டே வருகிறது என்பது கவனிக்கத்தது. சென்னையில் தொடரும் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகமும் முன்னேற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications