விட்டு விளாசப் போகுது.. இன்னைக்கும் சென்னையில் மழை இருக்கு.. வானிலை மையம் கொடுத்த ”ஜில்” அப்டேட்!
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுக்க வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகரம் குளிர்ந்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் வெயில் அதிகரித்தாலும், ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக தலைநகர் சென்னையில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இடையிடையே எப்போதாவது தலைநகர் சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் நேற்று கனமழை
அந்த வகையில் நேற்று மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. பகல் முழுக்க வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, போரூர், கோயம்பேடு, வடபழனி, அண்ணா நகர், வேளச்சேரி, வளசரவாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், வண்ணாரப்பேட்டையில் மழை வெளுத்து வாங்கியது.
இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், பெரம்பூர், மாதவரம், மணலி, அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், கள்ளிக்குப்பம், பாடி, கொரட்டூர், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, ஒரகடம், திருமழிசை ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் குளிர்ந்து காணப்பட்டன. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெயிலும், ஒருசில இடங்களில் மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
வானிலை மையம் கூறுகையில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 3) முதல் ஜூலை 4 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 5 முதல் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னையில் இன்று (03-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோர பகுதிகளில் இன்று (ஜூலை.3) தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04-07-2025 முதல் 06-07-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று ஜூலை.3 ஆம் தேதி மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications