சிக்கிய 2 பேர்.. வேளச்சேரி கட்டட விபத்தில் கைதான மேற்பார்வையாளர்கள்! பின்னணி என்ன? பரபர தகவல்
சென்னை: சென்னை வேளச்சேரி அருகே மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக கடந்த 4ம் தேதி திடீரென்று கட்டடம் ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் சிக்கிய 8 பேரில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்தனர். இவர்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணாக சென்னையில் கடந்த 3ம் தேதி முதல் 4ம் தேதி வரை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. விடியவிடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் கடந்த 4ம் தேதி சென்னை ரேஸ்கோர்ஸ் சாலை அருகே கிண்டி ஐந்து பர்லாங்க் ரோட்டில் கியாஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இதன் அருகே கட்டுமான பணிக்காக 50 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்ப்பட்டு இருந்தது. இதன் அருகே கியாஸ் நிரப்பும் நிலையத்துக்கான கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் வகையில் கன்டெய்னர் அறை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி பெய்த கனமழையின்போது ஏற்பட்ட மண் சரிவால் கன்டெய்னர் அறை மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையத்தின் கட்டடம் ஆகியவை 50 அடி பள்ளத்தில் விழுந்தது. அதோடு மழை நீரும் பள்ளத்துக்குள் அருவிபோல் கொட்டியது. இந்த விபத்து காரணமாக மொத்தம் 8 பேர் பள்ளத்தில் சிக்கிய நிலையில் 6 பேர் மீட்கப்பட்டனர்.
மாறாக சைட் என்ஜினியரான வேளச்சேரி ஜெயசீலன் (29), கியாஸ் நிரப்பும் நிலையத்தின் ஜெனரேட்டர் அறையில் இருந்த ஊழியரான வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த நரேஷ் (24) உள்ளிட்டோர் மாயமாகினர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் தான் 5 நாள் மீட்பு பணியை தொடர்ந்து இன்று இருவரின் உடலும் மீட்கப்பட்டது. அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளத்தில் இன்னும் வேறு யாராவது சிக்கி உள்ளனரா? என்பது பற்றி மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அடித்தளத்தை வலுவாக அமைக்காமல் கட்டுமானப் பணி மேற்கொண்டதாலேயே இந்த விபத்து நடந்திருப்பதாக அறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தான் தற்போது 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கட்டுமான பணிக்காக 50 அடி பள்ளத்தை தோண்டிய தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களான எழில், சந்தோஷ் ஆகியோரை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் எச்சரிக்கை விடுத்தும் கூட தொழிலாளர்களை ஏன் தங்க வைக்கப்பட்டனர். அதோடு பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications