"சென்னையில் நாளை மழை பெய்யும்.." வெதர்மேன் சொன்ன நறுக் மேட்டர்.. கனமழையாக இருக்குமா! பரபர தகவல்
சென்னை: தலைநகர் சென்னையில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்.. எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைநகர் சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இரண்டு நாட்கள் அடித்துப் பெய்த பேய் மழையால் நகரில் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அதன் பிறகு தமிழக அரசு மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டது. இதனால் சில நாட்களில் சென்னை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. இருப்பினும், பருவமழை நிறைவடையவில்லை என்பதால் மேலும் மழை இருக்கும்.
வானிலை: இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வரும் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நாளைய தினம் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் மழை இருக்கும்.. ஆனால் இது தொடர்பாக நாம் கவலைப்படத் தேவையில்லை. மிதமான மழை தான் இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வெதர்மேன்: முன்னதாக அவர் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்கே மழை என்பது குறித்து அவர் சில கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது டிச. 19-21 தேதிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இருப்பினும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் தெளிவாகத் தெரியும் என்றும் அவர் கூறியிருந்தார். இது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தேதிகளில் 18-22 மழை பெய்யலாம் எனக் கூறியிருந்தான். அதைப் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. தெற்கு தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகள் தான் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும். எனவே, சென்னைக்குப் பிரச்சினை இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை எப்படி: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் (டிச. 15) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (டிச. 16) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications