சிதம்பரத்தில் 22 செமீ.. பொத்துக்கொண்டு ஊற்றிய மழை.. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு
கடலூர்: மிக கனமழை பெய்துள்ளதால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழி, சிதம்பரம் ஊர்களில் 22 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை நீடிப்பதால் சிதம்பரம் நகரத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளதால் இன்றைய தினம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications