2015 VS 2023.. சென்னையில் எது மிக மோசமான வெள்ள பாதிப்பு? இதோ டேட்டா!
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்பு 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட அதிகம் என சிலர் கூறி வரும் நிலையில் இந்த 2 பேரிடர்களையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
2015 பெரு வெள்ளம்: சென்னையின் வரலாற்றில் அழிக்க முடியாத மறக்க முடியாத மிகப்பெரிய பேரழிவு 2015 பெருவெள்ளம். அந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஒரே நேரத்தில் தொடர் மழை கொட்டித்தீர்த்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 29 செ.மீ மழையும், விமான நிலையத்தில் 34.5 செமீ மழையும் பதிவானது. இதன் காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி முன் எச்சரிக்கை இன்றி நீர் திறக்கப்பட்டதால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நீரில் மூழ்கின.

வீடுகள், கட்டிடங்களின் தரைத்தளங்கள் மட்டுமின்றி அடையாறு, சைதாப்பேட்டை பாலங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ள நீர்மட்டம் அதிகரித்தது. பல கட்டிடங்களில் 2, 3 வது தளம் வரை தண்ணீர் மட்டம் உயர்ந்தது. கூவம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு உள்ளே வெள்ளம் புகுந்ததால் அவற்றின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. டிசம்பர் 2 ஆம் தேதி பிரபல ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததால் அதன் ஒரு நாள் பதிப்பு வெளியாகவில்லை.
2015 உயிரிழப்பு: மின்சாரம், தொலை தொடர்பு சேவைகள், இணையதள இணைப்பு போன்றவை சுமார் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பாதிக்கப்பட்டன. 10 நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையில் ரயில் சேவைகள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டன. அதேபோல் விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளத்தால் சென்னையில் விமான சேவையும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்கள் 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த பேரழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. லட்சக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. பல ஆயிரம் கோடி மதிப்பிலான இழப்பை அப்போது சென்னை சந்தித்து உள்ளது.
2023 வெள்ளம்: இதை தற்போது ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்துடன் ஒப்பிடுவோம். சென்னையில் நேற்று அதிகாலை வரை 340 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இது 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய மழை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆனால், 2015 ஆம் ஆண்டை ஒப்பீட்டு செய்து பார்க்கையில் இந்த பாதிப்பு குறைவுதான்.
காரணம் அப்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பவே 15 நாட்கள் ஆனது. ஆனால், தற்போது பல இடங்களில் ஒரே நாளில் வெள்ளம் வடிந்து போக்குவரத்து சீராகியுள்ளது. ஒரு நாள் மட்டுமே விமான சேவை பாதிக்கப்பட்டது. எந்த தொலைக்காட்சி, பத்திரிகை சேவைகளும் தடைபடவில்லை.

அபத்தமான ஒப்பீடு: தற்போதைய பாதிப்பை 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துடன் ஒப்பிடுவதே அதை குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். ஆனால், மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிய வேண்டும் என்பதற்காக அப்போதைய தகவல்களுடன் அலசுகிறோம். இம்முறை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டாலும், செல்போன், இணைய சேவையில் பாதிப்பு பெரிதாக இல்லை. அதுவும் 1-2 நாட்களில் மின் விநியோகமும் பல இடங்களில் சீராகி உள்ளது. இன்னும் சில இடங்களில் விரைவில் மின் விநியோகம் சீராகும் என மின் துறை தெரிவித்துள்ளது. 2015 பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 200. ஆனால், தற்போது 8 முதல் 12 பேர் பலியாகி உள்ளனர்.
பெரிய வித்தியாசம்: 2015 வெள்ளத்துக்கும் 2023 வெள்ளத்துக்குமான பெரிய வித்தியாசம் செம்பரம்பாக்கம் ஏரிதான். செம்பரம்பாக்கம் ஏரியில் முன் எச்சரிக்கை இன்றி திறந்துவிடப்பட்ட தண்ணீரே அப்போதைய பெரு வெள்ளத்துக்கு காரணம் என்று சிஏஜி அறிக்கையே தெளிவாக கூறி இருக்கிறது. ஆனால், இம்முறை கடந்த ஒரு வாரமாகவே செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளின் நீர் மட்டம் உயர உயர ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு எச்ரிக்கை விடுக்கப்பட்டு சரியான இடைவெளியில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் 2015 போன்ற பேரழிவில் இருந்து சென்னை இம்முறை தப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications