டிட்வா புயல்.. இலங்கையில் சிக்கித்தவிக்கும் 150 தமிழர்கள்.. இண்டிகோ விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு!
சென்னை: டிட்வா புயல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள 150 தமிழர்களை மீட்க சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் மூலமாக இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்புடன் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுமார் இரண்டு வாரங்களாக மழை பெய்து வருவதால், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த சில நாட்களான வானிலை மிக மோசமான சூழலுக்கு சென்றதால், கொழும்பில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை.

கொழும்பில் இருந்து புறப்படும் அத்தனை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த சூழலில் துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த 150 தமிழர்கள் உட்பட 300 பேர் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். 3 நாட்களாக உணவு உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவிக்கின்றனர்.
இதனிடையே நேற்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ வெளியாகியது. குழந்தைக்கு பால் கூட இல்லை, ஒரு வேளை உணவு மட்டுமே கொடுக்கப்படுகிறது, மின்சாரமும் இல்லை என்று பலரும் தவித்த குரலில் கூறினர். இதனிடையே போதுமான உணவு இல்லாததால், 7 தமிழர்கள் மயக்கம் அடைந்தனர்.
இதன்பின் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக கொழும்பில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதேபோல் தமிழர்களை பாதுகாப்புடன் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் உறுதி அளித்தார். இந்த நிலையில் சென்னை - தூத்துக்குடி இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கி இருக்கிறது.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான இயக்கம் தொடங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கொழும்பில் சிக்கியுள்ள 150 தமிழர்களை பாதுகாப்பாக மீட்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களை இண்டிகோ விமானம் மூலமாக அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் விரைவில் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications