ஃபெங்கல் புயல்.. சென்னைக்கு மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட தகவல்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. இன்றும் இந்த மழை தொடரும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், இரவு 10 மணி வரை பெய்த மழையின் அளவையும் வெளியிட்டிருந்தார். அதில் அதிகபட்சமாக மணலி பகுதியில் 134 மில்லி மீட்டர் மழையும், கத்திவாக்கத்தில் 112 மில்லி மழையும் பெய்திருப்பதாக கூறினார்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 470 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 670 கி.மீ தூரத்திலும் நிலைகொண்டிருந்தது. இது படிப்படியாக வடக்கு இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இந்த புயல் 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்றே சென்னையில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இப்போது ஊட்டியில் இருப்பது போல் ஜில்லென கிளைமேட் சென்னையில் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட ட்வீட் பதிவில், காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையிலிருந்து வடக்கு நோக்கி நகரும். பின்னர் அது 28ஆம் தேதி முதல் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர தொடங்கும்.

பின்னர் மேற்கு நோக்கி நகரத்தொடங்கியதும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நவம்பர் 28, 29ம் தேதிகளில் நல்ல மழை பெய்யும். காவிரி டெல்டா முதல் கடலூர் வரையிலான பகுதிகள் நவம்பர் 27ஆம் தேதியும் தொடர்ந்து மழைக்கான ஹாட்ஸ்பாட்டில் இருக்கும். நேற்று இரவு 10 மணி வரை நாகையில் 130 மி.மீ மழையும், திருவாரூரில் 85 மி.மீ. மழையும், மயிலாடுதுறையில் உள்ள மணல்மேட்டில் 75 மி.மீ மழையும் பெய்துள்ளது" என்று கூறினார்.

அதேநேரம் இரவு 10 மணி நிலவரப்படி சென்னையில் எங்கு எவ்வளவு மழை என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில் அதிகபட்சமாக மணலி பகுதியில் 134 மில்லி மீட்டர் மழையும், கத்திவாக்கத்தில் 112 மில்லி மழையும் பெய்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாபலிபுரத்தில் 96 மில்லி மீட்டர் மழையும், பள்ளிக்கரணையில் 83 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. எண்ணூரில் 75 மில்லி மீட்டர், புழலில் 72 மில்லி மீட்டர், மாதவரத்தில் 69 மி.மீ, பெருங்குடியில் 67 மி.மீ, கிண்டியில் 56 மி.மீ, மடிப்பாக்கத்தில் 50 மி.மீ மழை பெய்துள்ளது.
இதனிடையே இன்று காலை வெதர்மேன் வெளியிட்ட இன்னொரு பதிவில், காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது புயல் நவம்பர் 30 ஆம் தேதியன்று சென்னை மற்றும் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும். சென்னைக்கு தேவையான குடிநீர் இந்த மழையால் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை இன்று சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் வடக்கு நோக்கி நகர்வதால் 28-ம் தேதியும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளத. ஆனா 29ம் தேதி மேற்கு நோக்கி நகர தொடங்கும் என்பதால் அன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 30-ம் தேதி அன்றும் மேற்கு நோக்கி நகரும் என்பதால் சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் சென்னையில் மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications