Cyclone in Chennai: சென்னையை நெருங்கும் மிக்ஜாம் புயல்! தயார் நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்கள்!!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல், சென்னையை ஒட்டி ஆந்திராவில் கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ. தொலைவிலும் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறுகிறது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று மாலை முதல் நாளை வரை, வங்கக்கடலின் தென் மேற்கு, மத்திய மேற்கு பகுதியில் மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். வட ஆந்திர கடலோர பகுதிகளில், நாளையும் நாளை மறுநாளும் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று மணிக்கு, 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நாளை மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல இன்றும் நாளையும் சென்னை மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் அலை 2-3 மீ உயரத்திற்கு கொந்தளிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது
மழையை பொறுத்த அளவில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிக கன மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில், நாளை மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் புயலை எதிர்கொள்ள 12 மாவட்டங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அதாவது சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வில் ஈடுபடுவார்கள் என்றும், சென்னைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி, காஞ்சிபுரத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications