நேற்றும் இன்றும்! இரவோடு இரவாக முக்கிய சாலைகளில் வடிந்த மழைநீர்.. ஆனா போட்டோவில் இதை நோட் பண்ணீங்களா
சென்னை: கனமழையால் சென்னையில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்து வரும் நிலையில், நேற்றைய தினத்தை ஒப்பிட்டு பல வீடியோக்கள் போட்டோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று சென்னைக்கு அருகே வந்த போது அது தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நகரில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையில் பல்வேறு இடங்களிலும் கனமழை இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த மழை நேற்று நள்ளிரவு வரை பல்வேறு இடங்களிலும் பெய்தது.
கனமழை: ஏற்கனவே கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாகவே நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். விடிய விடியக் கனமழை பெய்த நிலையில், எல்லா இடங்களிலும் நீர் தேங்கி இக்கட்டான சூழல் ஏற்பட்டது.

மேலும், கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் வெள்ள நீரைக் கடல் உள்வாங்கவில்லை. இதனால் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. நேற்றிரவு புயல் தள்ளிச் சென்ற நிலையில், அதன் பிறகே மழையும் குறைந்தது கடல் சீற்றமும் குறைந்தது. அதன் பிறகு நகரின் பல்வேறு இடங்களிலும் நீர் வடியத் தொடங்கியது. சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
75% இடங்கள்: நகரின் முக்கிய சாலைகளில் இப்போது நீர் வடிந்துள்ளது. உட்புற சாலைகளில் நீர் வடியாத நிலையில், அதை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பம்ப் மூலமாகவும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றிரவுக்குள் 75% நீர் அகற்றப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நேற்றும் இன்றும் வீடியோ: இதற்கிடையே முக்கிய சாலைகளில் நீர் வடிந்துள்ள நிலையில், நேற்று அங்கே என்ன நிலை இருந்தது. இன்று நிலைமை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது. முக்கிய சாலைகளில் மழை நீர் வடிந்துள்ள நிலையில், அதை வீடியோவாக நெட்டிசன்கல் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அண்ணா சாலை, விமான நிலையம், பிராட்வே ஆகிய இடங்களில் மழை நீர் குறைந்துள்ளதாகக் கூறி காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதேநேரம் நகர் முழுக்க நீர் வடிந்துவிட்டது என்றும் சொல்வதற்கு இல்லை. இன்னுமே கூட நகரின் பல உட்புற பகுதிகளிலும் நீர் தேங்கியே இருக்கிறது. இருப்பினும், நேற்றுடன் ஒப்பிடும் போது நீரின் அளவு இன்று குறைந்துள்ளது. நாளைக்குள் பல இடங்களிலும் நீர் வடியும் என்றே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications