112 கி.மீ வேகத்தில் சூறைகாற்று.. தீவிர புயலாக மாறும் மிக்ஜாம்! சென்னை மக்களே உஷார்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல், தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இது மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை நிரப்பியுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இதற்கு 'மிக்ஜாம்' என பெயரிட்டுள்ளனர். இப்புயல் வரும் 5ம் தேதி சென்னைக்கும்-தெற்கு ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதன் பாதை மாறியுள்ளது.

அதாவது தெற்கு ஆந்திராவின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சென்னையில் சூறைக்காற்றும், கடும் மழையும் இருக்கும் எனவும் எச்சரித்திருந்தது. எனவே சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வில் ஈடுபடுவார்கள் என்றும், சென்னைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி, காஞ்சிபுரத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 290 கி.மீ தொலைவில் இந்த புயல் நிலை கொண்டிருப்பதாகவும், சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. சாதாரண புயல் எனில் மணிக்கு 65-80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதுவே தீவிர புயல் எனில் காற்றின் வேகம் 89-117 கி.மீ அதிகரிக்கும். இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சில புயல்கள் கரைக்கு வரும்போது வலுவிழந்துவிடும். ஆனால் மிக்ஜாம், தீவிர புயலாகவே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள், மின்சாரத்துறை பணியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணிகளை களத்திலிருந்து மேயர் பிரியா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications