திணறடித்த மிக்ஜாம் புயல்! அரசு எச்சரிக்கையை கண்டு கொள்ளாத மக்கள்! பாயும் வெள்ளத்திற்கு அருகே.. பகீர்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அரசு எச்சரிக்கையை மீறி அதை வேடிக்கை பார்க்க அங்கே பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு வழி செய்துவிட்டது. இந்தப் புயல் நேற்று சென்னைக்கு அருகே வந்த போது இது தீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் நகரில் எல்லா இடங்களிலும் மழை கொட்டியது.

சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 2015க்கு பிறகு இந்தளவுக்கு அதி தீவிர கனமழை பெய்வது இதுவே முதல்முறையாகும்.
புரட்டி எடுத்த புயல்: இந்த புயல் இப்போது வலுவிழந்த ஆந்திரா பக்கம் சென்றுள்ளது. இந்தப் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய கனமழை நேற்று இரவு வரை நீட்டித்தது. இந்த மழையால் நகரில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கியது. நேற்று கடல் வெள்ள நீர் உள்வாங்காத நிலையில், நேற்றைய தினம் முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது. புயல் சென்னையில் இருந்து தொலைவில் சென்ற பிறகு, கடல் சீற்றம் குறைந்தது.
அதன் பின்னரே முக்கிய சாலைகளில் இருக்கும் மழை நீர் வடிந்தது. உட்புற பகுதிகளில் மட்டுமே நீர் தேங்கி இருக்கும் நிலையில், அதையும் வெளியேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று மாலைக்குள் பெரும்பாலான இடங்களில் நீரை அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலட்சியம்: இந்த கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தைப் பார்க்க மக்கள் கூடி வருகின்றனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் ஆபத்து இருப்பதால் இதுபோல வெள்ள நீர்ப் பாயும் இடத்திற்கு அருகே செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த எச்சரிக்கையைப் பொதுமக்கள் அலட்சியம் செய்து வருகிறார்கள். அடையாறு பாலத்தின் மீது இருந்து பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள ஆறுகளில் நீரைப் பார்ப்பதே அரிது. பெரும்பாலான நேரம் இந்த ஆறுகள் வறண்டு அல்லது மிகக் குறைந்த நீரே இருக்கும். மேலும், அப்போது சாக்கடை நீரும் கலந்து இருக்கும் என்பதால் மோடமாக இருக்கும். இதனால் இப்போது வெள்ள வெள்ள நீர் பாய்வதைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள். இதனால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் என்ற போதிலும் அரசு எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசல்: அதிலும் மேம்பாலத்திலேயே வாகனத்தை நிறுத்திப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் வாகனத்தையும் பாலத்திலேயே நிறுத்துகிறார்கள். இப்போது மழை குறைந்து போக்குவரத்து சீராக ஆரம்பித்துள்ள நிலையில், பாலத்தில் பாலங்கள் வாகனம் நிறுத்தப்படுவதால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பாலத்தில் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கே விரைந்த போலீசார், பொதுமக்களை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், பொதுமக்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், அங்குப் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நிலவுகிறது.












Click it and Unblock the Notifications