வலுப்பெற்றது.. நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகும் மோந்தா புயல்.. சென்னைக்கு மழையை கொடுக்குமா?
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அதே பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை மறுநாள் திங்கட்கிழமை மோந்தா புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மோந்தா புயல், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மழையை கொடுக்குமா?
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 15 செ.மீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 12 செ.மீ, மழையும், ஊத்து பகுதியில் 11 செ.மீ, மழையும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் 10 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

புயல் சின்னம்
இந்நிலையில், வரும் 27 ஆம் தேதி (நாளை மறுநாள்) வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. அது மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை, இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யலாம்.
வரும் 27 ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28 ஆம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மோந்தா புயல்
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மோந்தா' புயல் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 27 ஆம் தேதி புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்படி புயல் உருவாகும் பட்சத்தில், அதற்கு, 'மோந்தா' என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்குமா?
வங்கக்கடலில் உருவாகும் மோந்தா புயல், தமிழகத்துக்கு அருகில் வந்து நகருமா? அல்லது ஆந்திராவுக்கு சென்றுவிடுமா? என்பது இப்போது வரை உறுதியாகவில்லை. இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வராமல் அப்படியே திறந்த கடல் பகுதி வழியாக ஆந்திரா நோக்கி சென்றால், பலத்த மழையை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தவறவிட்டுவிடும். மாறாக மிதமான மழையே இருக்கும்.
மோந்தா புயல் வடதமிழகத்தையொட்டி நகர்ந்து, பின்னர் ஆந்திரா சென்றால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இந்த புயல் மழையை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்புக்கு ஓரிரு நாட்களில் விடை தெரிந்துவிடும். இந்த புயலால் வடமாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications