டீ.. மிளகாய் பஜ்ஜி.. ராஜா சார்..ஒட்டு மொத்தமாய் ஊட்டியாய் மாறிய நம்ம சென்னை..கொட்டி தீர்த்த கனமழை.!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வரும் நிலையும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சொன்னது போலவே சென்னையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 240 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 520 கி.மீ தொலைவிலு, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 720 கி.மீ. நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என கூறப்பட்டிருந்தது.
அந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூ,ர் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே நாளை சென்னையில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. எப்போது அடுப்பை பற்ற வைத்தது போல் இருக்கும் சென்னை, ஊட்டி கொடைக்கானல் போல் மாறியிருந்தது. இந்நிலையில், இன்று இரவு 9 மணிக்கு மேல் தொடங்கிய மழை பத்தரை மணி வரை நீடித்தது. இடைவிடாமல் வெளுத்து வாங்கிய மழை காரணமாக சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அண்ணா நகர், வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் குளிர்ச்சியாய் மாறின.
மேலும் போரூர், ஐயப்பன் தாங்கல், காரப்பாக்கம், வானகரம், நெற்குன்றம், மதுரவாயல், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், கோயம்பேடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வேலை முடிந்து வீடுகளுக்கு சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். நாளை காலை வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications