புயல் உருவாகாது.. நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.. இந்திய வானிலை மையம் அப்டேட்!
சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வரை வடக்கு திசையில் நகரக்கூடும் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்து நாளை மறுநாள் (நவம்பர் 30) காலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் காரணமாக புதுச்சேரியில் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் நாளை (நவம்பர் 29) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நேற்று (நவம்பர் 27) காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 28) காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை - திரிகோணமலையிலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இந்த புயல் சின்னத்துக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டிருந்தது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 50 மூலம் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வரை வடக்கு திசையில் நகரக்கூடும். நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும், நாளை மறுநாள் காலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் இன்று இரவு முதல் மழையின் அளவு அதிகரிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications