கொஞ்சம் லேட்.. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் கால தாமதம்.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: அரபிக்கடலில் இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதம் ஆகியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் தென் தமிழகம் என அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்குகிறது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியே தமிழகத்தில் இந்த மழை பொழிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் போதிய அளவு பெய்யாத நிலையில், பருவமழை நிறைவடைந்து முறையாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அரபிக்கடலில் உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகும் இந்த காற்றுழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிகிறது. கேரளாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் புரட்டி எடுக்கும் கனமழையால் தலைநகர் திருவனந்தபுரம் அதிக அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கழகூடம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து மிதவை படகு மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications