டெல்லியில் கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து! பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
டெல்லி: கடந்த சில நாட்களாக டெல்லியில் கடும் வெயில் பதிவாகி வந்த நிலையில், தற்போது மழை கொட்ட தொடங்கியுள்ளது. இதனால் திடீரென தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்துவிழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழையானது இந்தியாவில் 70% மழை தேவையை பூர்த்தி செய்துவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 30ம் தேதி இந்த பருவமழை தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய இந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மத்திய இந்தியா வரை வந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி எடுத்தது.

இந்நிலையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை டெல்லியில் கனமழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு டெல்லியில் ஹரி நகர், பிகாஜி காமா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது. தாழ்வான பகுதிகளில் நிற்க வைக்கப்பட்டிருந்த கார்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
மொத்தமாக சராசரியாக 15 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. லோதி காலணியில் 9.6 மி.மீ, ரிட்ஜ் பகுதியில் 6.2 மி.மீ என பல பகுதிகளில் வேறுபட்ட அளவில் மழை பெய்திருக்கிறது. மழை காரணமாக வெப்பநிலை 4 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இந்த மழை மேலும் 4 நாட்கள் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்திருக்கிறது. பயணிகளை அழைத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது இந்த கூரை விழுந்ததால் கார்கள் அப்பளம் போல நொறுங்கியுள்ளன.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த பகுதியை மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். அதேபோல இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications