டெல்டா மாவட்டங்களை மிரட்டும் அதிகனமழை.. நெருங்கிய ஆபத்து.. வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரிக்கை!
சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த 36 மணி நேரத்திற்கு அதீத கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளார் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர். குறிப்பாக இன்று இரவு 7 மணி முதல் நாளை (டிசம்பர் 12) இரவு 7 மணி வரை பரவலாக தொடர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மேற்கு- வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய உள்ளது. ஏற்கனவே ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை நோக்கி வரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 11, 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், "மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற டெல்டா & வட கடலோர பகுதிகளில் மிதமானது முதல் சற்றே கனமழை துவங்கியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் அடுத்த 1 மணி நேரத்தில் பரவலாக மழை பதிவாகும். டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழையாகவும், அவ்வபோது கனமழையாக இருக்கும். இன்று மாலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்த நன்குமைந்த தாழ்வு பகுதி, மேலும் தீவிரமடைந்து டெல்டா கடற்கரையில் நிலைக்கொள்ளும். டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த 36 மணி நேரத்திற்கு அதித கனமழை எச்சரிக்கை, குறிப்பாக இன்று (11.12.2024) இரவு 7 மணி முதல் நாளை (12.12.2024) இரவு 7 மணி வரை பரவலாக தொடர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும். தரைக்காற்று இயல்பிற்கு மாறாக வீசும். டிசம்பர் 11ம் தேதி துவங்கியுள்ள நான்காம் சுற்று மழை டிசம்பர் 13 ஆம் தேதி இரவு வரை டெல்டா & வடகடலோர மாவட்டங்களில் நீடிக்கும். நாளை முதல் உள் மாவட்டங்களிலும் மழை அதகரிக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications