காற்றழுத்த தாழ்வு நிலை இப்போ எங்கே இருக்கு? இன்று தமிழ்நாட்டில் மழையா? டெல்டா வெதர்மேன் கணிப்பு!
சென்னை: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றைய வானிலை நிலவரம் குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று (டிசம்பர் 8) வறண்ட வானிலையே நிலவும் என்றும் நாளை மதியத்திற்கு மேல் மழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மற்றும் வட மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் ஒரு சில இடங்களில் முழு கொள்ளளவை எட்டியது.

தமிழ்நாட்டில் மழை
நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் வெயில் வாட்டியது. ஒரு சில இடங்களில் மட்டுமே அவ்வப்போது மழை பெய்தது. நவம்பர் இறுதியில் டிட்வா புயல் இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடிய கையோடு தமிழகத்திலும் நுழைந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தற்போது மழை விட்டுள்ள நிலையில் மீண்டும் நாளை முதல் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டா வெதர்மேன் என அறியப்படும் ஹேமச்சந்தர், தமது வானிலை கணிப்புகளை வெளியிட்டுள்ளார்
அதன்படி, தெற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி இந்தத் தாழ்வு நிலை நகரக்கூடும்.
இன்றைய வானிலை (08.12.2025)
1. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று (08.12.2025) வறண்ட வானிலையே நிலவும். இன்று விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம்.
2. பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும்.
3. நாளை (09.12.2025) பிற்பகலில் காவிரி டெல்டா கடலோர பகுதிகளில் மழை துவங்கி இரவு நேரத்தில் பரவலாகும்.
4. குறிப்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 10, 11ஆகிய நாட்களில் விட்டு விட்டு மழை பதிவாகும்.
5. ஒருசில இடங்களில் கனமழையும், கடலோரத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழையும் எதிர்ப்பார்க்கப்படுவதால், வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.
6. வட மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம்பர் 15 வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து விதமான வேளாண் பணிகளையும் திட்டமிடலாம் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications