டிட்வா புயல்.. இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை.. உயிரிழப்பு 40ஆக அதிகரிப்பு.. 17 மாவட்டங்கள் பாதிப்பு!
கொழும்பு: இலங்கை கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. அதேபோல் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் திட்வா புயல் காரணமாக கடந்த இரு வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த கனமழையால் 17 மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக தேயிலை தோட்ட பகுதிகளான நுவரெலியா, பதுல்லாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

பதுல்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 16 பேர் உயிருடன் புதைந்ததாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
20க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1,158 குடும்பங்களில் உள்ள 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு, சுமார் 400 வீடுகள் பாதி சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு தரப்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர் உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட மழைநீர் சூழ்ந்துள்ளது. இன்னொரு பக்கம் நிலச்சரிவால் பல்வேறு சாலைகளும் முடங்கி இருக்கின்றன. சில பகுதிகளில் மழைநீர் வீட்டின் மேற்கூரை வரை உயர்ந்து இருக்கும் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications