தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. கதறும் மக்கள்.. கோடை மழை இருக்கு ஆனா ஒரு ட்விஸ்ட்.. என்ன பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்தாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் இப்போது உச்சத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

சுட்டெரிக்கும் வெப்பம்: அதிகபட்ச வெப்பம் என்று பார்க்கும் போது தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° - 5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. தமிழக உள் மாவட்டங்களில் கரூர் பரமத்தி, தருமபுரி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிகபட்சமாகச் சேலத்தில் 41.7° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து ஈரோட்டில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், மதுரை நகரத்தில் 41.2° செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 34° - 37° செல்சியஸ், புதுவையில் 35.6° செல்சியஸ், காரைக்கால் பகுதியில் 34.6° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 23° - 30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.5° செல்சியஸ் (இயல்பை விட +2.2° செல்சியஸ் மிக அதிகம்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.3° செல்சியஸ் (இயல்பை விட +1.0° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது.
வானிலை: வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பையும் வானிலை மையம் பகிர்ந்துள்ளது. அதில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மழை: ஏப்ரல் 11ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஏப்ரல் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் ஏப்ரல் 14, 15 ஆகிய நாட்களில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பம் அதிகரிக்கும்: அடுத்த ஐந்து நாட்கள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° - 3° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும். அடுத்த 3 நாட்கள் அதாவது ஏப்ரல் 11 வரை அடுத்த மூன்று தினங்களுக்குக் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications