சென்னை மெரினா பீச் இப்படி ஆகிடுச்சே.. இங்க இருந்த கரையையே காணோம்.. மொத்தமாக மாறிடுச்சே
சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக மெரினா கடற்கரையில் இருந்த கரையே காணாமல் போய் இருக்கிறது. கடல் எது, கரை எது என்பது தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை மாறி இருக்கிறது. மெரினா கடற்கரை குளம் போல் காணப்படுவதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மறுபக்கம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 2 தினங்களாக பரவலாகவே மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

சென்னையில் நேற்று இயல்பைவிட அதிக அளவு மழை பெய்தது. சில நாட்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த காரணத்தால் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக அம்பத்தூர், பாடி, ராயபுரம், அமைந்தகரை, ஆதம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இதேபோல் சென்னை ஓஎம்ஆர் சாலை, அண்ணா நகர் சாலைகளிலும் மழை நீர் அதிக அளவு தேங்கியது.
பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் ஜிஎஎஸ்டி சாலையில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பும் தண்ணீர் தேங்கியது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நேற்று இரவு கனமழை காரணமாக கடுமையாக போக்குவரத்து முடங்கியது. ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, ஓஎம்ஆர் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர்,மந்தை வெளி, திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர் போன்ற கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் கனமழை காரணமாக தண்ணீர் குளம் போல் தேங்கியது. மெரினா கடற்கரையில் இருந்த கரையே காணாமல் போனது. கடல் எது, கரை எது என்பது தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை மாறி இருக்கிறது. இந்நிலையில் கடற்கரையில் மழைநீரை வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி உள்ளனர்.. குளம் போல் தேங்கி உள்ள தண்ணீரை இயந்திரம் மூலம் மணலில் தற்காலிகமாக வடிகால் அமைத்து கடலில் தண்ணீரை வடியவைக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

இதனிடையே சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications