மழை மறைவு ஊர்களில் கூட சூழ்ந்த வெள்ளம்! அபாயத்தில் வீடுகள்! நெல்லை, தூத்துக்குடியில் தேவை நடவடிக்கை
திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் மழை மறைவு ஊர்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மக்களும், வீடுகளும் அபாயத்தில் உள்ளன. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்தமிழகத்தில் அநேர இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்கு மாவட்டங்களில் பல இங்களில் கன முதல் அதிக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் நுழைந்துள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி, பழைய பேட்டை உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்: மேலும் அடுத்த வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்கு மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையின் தாக்கம் என்பது இன்னும் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்போது நேற்று இரவு முதல் இன்று மதியம் 2.30 மணி வரையில் மேற்கு தொடர்ச்சி மழையையொட்டி பகுதிகளை தவிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மழை மறைவு ஊர்களிலும் கூட கனமழை பெய்துள்ளது.
மழை குறைந்த பகுதிகள்: அதாவது வானம் பார்த்த பூமியாக இருக்கும் தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட தாலுகாக்களில் அதிக கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என எந்த பருவமழை வந்தாலும் இந்த தாலுகாக்களில் மழை என்பது அதிகமாக பெய்யாது. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. முற்றிலுமாக மாறியுள்ளது. நேற்று இரவு முதல் இன்று வரை தொடர்ந்து இந்த தாலுகாக்களிலும் மழை என்பது வெளுத்து வாங்கி வருகிறது.
நெல்லை நிலவரம்: எப்போதுமே சூரியனின் வெயிலை மட்டுமே அதிகம் பார்த்த இந்த தாலுகாக்களின் பல கிராமங்கள் தற்போது வெள்ளத்தில் மூழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் என்றால் என்றால் அங்கு பெய்த கனமழை தான் காரணம். அதாவது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் இன்று மதிம் 2.30 மணி நிலவரப்படி 191 மில்லி மீட்டர் (அதாவது 19 செமீ) மழை பெய்துள்ளது. அதேபோல் திசையன்விளையையொட்டிய மூலக்கரைப்பட்டியில் 200 மில்லி மீட்டர் (20 செமீ) மழை பெய்துள்ளது.
தேவை நடவடிக்கை: இதுதான் தற்போது அங்கு நிலைமையை மோசமாக்கி உள்ளது. ஏனென்றால் இந்த பகுதியில் பெரும்பாலும் மழை அதிகம் இருக்காது என்பதால் மக்கள் எப்போதும் மழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருப்பது இல்லை. மேலும் இங்குள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூலித்தொழிலாளர்களாகவும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாகவும் இருக்கின்றனர். அதோடு பழைய காலத்தில் கட்டப்பட்ட மண்சுவர் வீடுகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல வீடுகள் இடியும் அபாய நிலையை எட்டலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி நிலவரம்: அதேபால் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், திருச்செந்தூரிலும் கனமழை பெய்து வருகிறது. சாத்தான்குளத்தில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரிலும் தொடர்ந்து அதிக மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதிகளிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மேலும் மீனவ மக்கள் ஏராளமாக உள்ளனர். இதனால் இந்த பகுதிகளிலும் உடனடியாக அரசு மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்கவனம் செலுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும். அப்போது தான் உயிர் பலி ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications