சம்பவம் ஆரம்பம்.. அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டும் மழை! வந்த புது அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் ஓரளவுக்குக் குறைந்து குளிர்ச்சியான ஒரு கிளைமேட் நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை சீசன் ஆரம்பித்தது முதலே நல்ல மழை பெய்து வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக மழை குறைந்து ஓரளவுக்கு வெப்பமான சூழல் நிலவி வருகிறது. அதேநேரம் கடந்த சில நாட்களில் மாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.

17 மாவட்டங்களில் மழை கொட்டும்
இதற்கிடையே தமிழ்நாட்டில் மாலை 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 2 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், மதுரை புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சம்பவம் ஆரம்பம்
இதுபோக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதா வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாகச் சில தாழ்வான இடங்களில் நீர் தேங்கும் என்றும் டிராபிக் பாதிப்பும் இதனால் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 2ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்ப நிலையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். மேலும், இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 20 செல்சியஸை ஒட்டிடம் இருக்கக்கூடும். நாளை (31-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications