அடுத்த 4 நாட்கள்.. கேப் விடாமல் கொட்ட போகுது கனமழை.. லிஸ்டில் எந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை இருக்கிறது. இதற்கிடையே அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை காணப்படுகிறது. இதற்கிடையே வரும் நாட்களிலும், குறிப்பாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை கொட்டும்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றைய தினம் செப்டம்பர் 8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை செப்டம்பர் 9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழை
செப்டம்பர் 10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 11 முதல் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்த வரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றைய தினம் தென்தமிழகக் கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். செப்டம்பர் 11ம் தேதி தமிழகக் கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications