பிச்சு உதற போகுது மழை..அடுத்த 2 மணி நேரத்திற்கு.. தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் இந்த மழை வெப்பத்தை கணிசமாக குறைத்து, குளுகுளு வானிலையை கொடுத்துள்ளது. இற்கிடையே தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை சீசன் முடிந்த பிறகு மழை சீக்கிரமே நின்றுவிட்டது. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் கணிசமாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து இருந்தது.

மாறும் வானிலை
இதனால் மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே நிலவியது. அந்தளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. சென்னையில் காற்றில் உள்ள ஈரப்பதமும் சேர நிலைமை மோசமாக்கியது. வெளியே சென்றாலே வேர்த்து போய் தான் திரும்புவோம் என்ற சூழல் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வானிலை மெல்ல மாறி வருகிறது.
மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. இத்தனை காலம் அதீத வெப்பத்தால் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு இது மிக பெரியளவில் நிம்மதியை தருவதாக இருக்கிறது
19 மாவட்டங்களில் மழை
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகள் வழுக்கலாக மாறும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications