"மொத்தம் 22 மாவட்டங்கள்.." அடுத்த 2 மணி நேரத்திற்கு பிச்சு உதற போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் மொத்தம் 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாதங்களாகக் கோடை வெயிலால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில், இந்த கோடை மழை வெயிலைத் தணிப்பதாக இருந்துள்ளது.

இதற்கிடையே அடுத்து வரும் நாட்களிலும் பரவலாக மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
22 மாவட்டங்களில் மழை: அடுத்த 2 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை தொடரும் என்றே கூறப்பட்டுள்ளது.
வானிலை எப்படி: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "இன்று மே 18ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கனமழை தொடரும்: நாளை மே 19ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications