விடைபெறும் தென்மேற்கு பருவமழை.. வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவமழை இன்று முதல் மெல்ல மெல்ல விடைபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை எப்போது முதல் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் முடிய தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. வட மாநிலங்களில் அபரிமிதமாக பெய்தாலும் தென் மாநிங்களில் குறிப்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் இந்தியாவில் இன்று 25ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17ஆம் தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15க்குள் முழுமையாக விலகும். இந்த நிலையில் இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்குகிறது.
மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் என்றும் படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்கு பருவமழை விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழைதான் அதிக அளவில் கை கொடுக்கும் என்பதால் விவசாயிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications