9 மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொடும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி?
சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வட உள் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதேபோல் மே 5 ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் புழுக்கத்தினால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கொளுத்தி எடுக்கும் வெயிலை கருத்தில் கொண்டு தேவையின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை: நாளுக்கு நாள் வெயில் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வானிலை மையமும் மேலும் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இதனால் தமிழகத்தில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்ப அலை உச்சத்தை தொடும்: இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேனும் மே 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வட உள் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியதாவது:- மோசமான செய்தி என்னவென்றால், தமிழகத்தில் வெப்ப அலை மே 1 முதல் 4 ம் தேதி வரை வட உள் தமிழகத்தில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த மாவட்டங்கள்?: குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை இருக்கும். நல்ல செய்தி என்றால்.. அதே நேரத்தில் மே 5 ஆம் ஆம் தேதி முதல் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை மே 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பமாகத்தன் இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னையை பொறுத்த அளவில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக்கொண்டே தான் காணப்படுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இது போக சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 107 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
மழைக்கு வாய்ப்பு: எப்போது வெயில் தணிந்து மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்கள். எனினும் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது.












Click it and Unblock the Notifications