நீலகிரி டூ குமரி வரை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்சு அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வந்த நிலையில், தென் மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்திருக்கிறது.
அதாவது நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள் அலர்ட் என்பது, மிதமான முதல் கனமழைக்கான வாய்ப்பு இருக்கும்போது கொடுக்கப்படும் அலர்ட். இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அர்த்தம். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், சாலைகளில் போக்குவரத்து பாதிப்புகள் சில இடங்களில் மின்வெட்டு அல்லது மின்சாரம் தடைபடும். மற்றபடி பெரிய பாதிப்புகள் இருக்காது.
ஆரஞ்சு அலர்ட் என்பது, கனமழை முதல் அதிக கனமழைக்கான பெய்யும் என்பதை குறிக்க கொடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையின் போது 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை மழை பெய்யக்கூடும்.
முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன்.25) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை (ஜூன்.26) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூன்.27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன்.29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (ஜூன்.25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று (ஜூன்.25) தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3*
செல்சியஸ் வரை உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்று (ஜூன்.25) தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications