சென்னையை வெளுத்தெடுக்கும் மழை.. இன்னும் 2 மணி நேரத்துக்கு விடாதாம்! நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள்!
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆலந்தூர், ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னையில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இன்று இரவு தமிழ்நாட்டில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், மெரினா, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், அம்பத்தூர், சேத்துப்பட்டு, சேப்பாக்கம், ஆலந்தூர், வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி ,பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், செம்பரம்பாக்கம், பூவிருந்தவல்லி, திருமழிசை, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விடாமல் கொட்டி வரும் மழையால் சாலையில் தண்ணீர் ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அண்ணா சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, வானிலை மையம் தெரிவித்துள்ள லேட்டஸ்ட் தகவல், மழை மேலும் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை இன்னும் 2 மணி நேரம் தொடர்ந்து நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications