இனி வெயிலே கிடையாது.. ஃபுல்லா மழை தான்! தமிழகத்துக்கு குட் நியூஸ்! மெட் கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை தீவிரமாகும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, திண்டுக்கல் மலைப்பகுதிகள் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி பற்றியும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி அளவில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications