விடிய விடிய மழை "லீவுலாம் இல்லை.." சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. மாவட்ட ஆட்சியர்
சென்னை: சென்னையில் இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனிடையே, சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களை தவிர பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழை அதிகம் பொழியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்யவில்லை. அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது சம்மர் வந்து விட்டதோ என எண்ணும் வகையில் மாதத்தின் துவக்கத்தில் வெயில் வாட்டி வதைத்தது.

கடுமையான வெப்பம் நிலவிய நிலையில், கடந்த சில தினங்களாக வானிலை மாறி அவ்வப்போது தமிழகம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதலே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு மழை பெய்ய தொடங்கியது. இரவு நேரத்தில் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications