வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி ஜங்சன்.. நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து
திருநெல்வேலி: பேயாத பெருமழை கொட்டித்தீர்ப்பதால் திருநெல்வேலி நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. நெல்லை ஜங்சன் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு, காட்டாற்று வெள்ளம் என தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கனஅடி வரைக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் அணைகள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி. இங்குள்ள 11 அணைகளில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர குடியிருப்புகளையும், வயல்களையும், தாழ்வான இடங்களையும் வெள்ளநீர் சூழ்வது வழக்கமாக நடந்துகொண்டிருக்கிறது. தற்போது திருநெல்வேலியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளதால் தற்போது ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கியுள்ளன.
தொடர் கனமழை காரணமாக நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

3 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையும் சேர்ந்துகொண்டதில் தாமிரபரணி ஆற்றில் தற்போது வரை 1 லட்சம் கனஅடிக்கு மேல் பெருவெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. இதில், கரையோரக் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.
தரை பாலங்கள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டமே ஸ்தம்பித்து போயுள்ளது.












Click it and Unblock the Notifications